என் தமிழ் எப்படி ?

என் தமிழ் எப்படி ?

உங்களுக்கு தமிழ் மொழியை பிழைன்றி எழுதத் தெரியுமா ?
  1. சங்கு - என்பது

  2. இடைத்தொடர்க் குற்றியலிகரம்
    வன்தொடர் குற்றியலுகரம்
    மென்தொடர் குற்றியலுகரம்
    நெடில்தொடர்க் குற்றியலுகரம்

  3. வரகியாது - பிரித்தெழுதுக

  4. வரகு + யாது
    வரகி + யாது
    வர + யாது
    வரக்கு + யாது

  5. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்

  6. 2
    4
    6
    8

  7. தமிழ் இலக்கணத்தில் வழக்கு எத்தனை வகைப்படும்?

  8. 2
    3
    4
    5

  9. பொற்கொல்லர் பொன்னைப் பறி எனக் கூறுவது?

  10. குழுஉக்குறி
    மங்கலம்
    இடக்கரடக்கல்
    இவை எதுவும் இல்லை

மேலும் படிக்க »

தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும்.

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலை எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 குறிஞ்சி முல்லை வாணர் மிகப்  பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும்,
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.

தொன்மை:

 அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழியான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...

2.முன்மை:

முன்மை என்றால் முந்தி நிற்குந் தன்மை என்க...

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு... அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே...

பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்...

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே....

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்...

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்...

3. எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.


 தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை.  (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான சொற்கள் இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ஷி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

"தண்டலை மயில்க ளாடத்
 தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
 குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத் 
 தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட 
 மருதம்வீற் றிருக்கு மாதோ"

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர்.


ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக்களல்ல.

வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார்.


4. ஒண்மை (ஓளிமை);

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

1. பொய் பேசுதல்,
 2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
 3. தீயசொற்களைப் பேசுதல்
 4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.


5. இளமை : எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:

தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரிய சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து  சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு)

6. வளமை - (சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை)

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,

அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,

கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.

யானையைக் குறிக்க 25 பெயர்கள் உள்ளன.

கன்று,பிள்ளை,குட்டி,குஞ்சு,சேய்,குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே.  யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க.  

அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

7. தாய்மை; (பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை)

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர்.

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

8. தூய்மை :

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை... பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்பதனை அறிவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

9. செம்மை - (செழுமை)

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும்
 கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:

மலையாளம்: கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து -  வந்நு...

தெலுங்கு:பருப்பு -  பப்பு, மருந்து -  மந்து

கன்னடம்: பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர, கலுழன் -கருட(g), கோட்டம்- கோஷ்ட, சாயை -சாயா (ch), தூண்டம் - ஸ்தூணா, மயில் -மயூர முகம்- முக(kh) வட்டம் - வ்ருத்த.

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.


10. மும்மை (இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை)

இயல், இசை,  நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

11. இனிமை

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.


12. தனிமை :

தனித்து இயங்கும் தன்மை.

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

 ‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."
தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.


13. நுண்மை :

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.

என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

*அவற்றுள் நகை என்பது...

"எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப"

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்...
 
*அழுகை என்பதோ...

"இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே"

*இளிவரல் என்னும் இழிவுறுதல்.  இகழ்வுறுதல் என்பதோ...

மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

*மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ...
 
"புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே."
 
*அச்சம் என்பதோ...

அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
 
*பெருமிதம் என்பதோ...

கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
 
*வெகுளி எனப்படும்  சினத்தல் என்பதோ

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

*உவகை என்பதோ
 
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

14. திருமை - 'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.

இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.

திருமைக்கு அழகு என்றும் பொருள்.


15. இயன்மை - இயல்பான தன்மை...

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி... தேவபாடை என்பது போன்றது அல்லாமல் இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால்   உருவானது என்க...
(சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன... தமிழைத் தோற்றுவித்தார் எனப் பாடப்படவில்லை...)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல் அதாவது ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்...


16. வியன்மை - உலகெங்கும் பரவியுள்ள தன்மை ...  சில தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன... எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.

இவையே பாவாணர் தமிழின அரும்பண்புகளாகக் கண்டு சொன்ன பதினாறு குணங்களாகும். நன்றி...


மேலும் படிக்க »

பன்னாடையிற் படிந்தவை 3/11/15 -30/11/15

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை : 30/11/15

1. தேனின்னி பண்பல்லவா - தேனின் பண்பல்லவா
2. சோதனை - சிக்கல்/தடை (மகேசம்மா உதவுக)
3. அனுபவிக்க - துய்க்க
4. நான் ஒரு வணிகர் - நான் ஒரு வணிகன்
5. விளைகிறேன் - விழைகிறேன்
6. அறிஞரகளின் - அறிஞர்களின்
7. ஆளவிலை - ஆளவில்லை
8. இவத்தை - இவற்றை
9. அயர் சொல் - அயற்சொல்
10. யோசியுங்கள் - சிந்தியுங்கள்
11. ஆதங்கம் - ஏக்கம் (அம்மா - உதவுக)
12. ஆர்வளர்கள் - ஆர்வலர்கள்
13. இந்த பிழையை - இந்தப் பிழையை (அந்த/இந்த என்ற சுட்டுகளின் முன்னும் எந்த என்ற வினாவையும் அடுத்து வரும் வல்லினம் வரும்)
14. இப்படி பழகிவிட்டோம் - இப்படிப் பழகிவிட்டோம்
15. அதிகம் - நிறைய
16. தவறகுமாம்மா - தவறாகுமா அம்மா
17. வயழியாக - வழியாக
18. மலேசியாவை சேர்ந்தவள் - மலேசியாவைச் சேர்ந்தவள்
19. தாமதமாக - காலம்தாழ்த்தியே (மகேசம்மா உதவுக)
20. இசைப்பாட்டு தானே - இசைப்பாட்டுத் தானே
21. குலூர் - சூலூர்
22. கல்வியறிவாற்றலை கற்பிப்பவர் - கல்வியறிவாற்றலைக் கற்பிப்பவர்
23. இரவரின் பதில் - இருவரின் விடை
24. வித்தியாசம் - வேறுபாடு

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை - 27/11/15

1.  பிள்ளைகளை பிரியாது - பிள்ளைகளைப் பிரியாது - (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
2.  வெளளத்தை - வெள்ளத்தை
3.  பிரமிப்பாகவும் - வியப்பாகவும்/மலைப்பாகவும்
4.  விடுப்பு கொடுக்கப் - விடுப்புக் கொடுக்கப் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
5.  சுயமதிப்பீடு - தன்மதிப்பீடு
6.  அதுகளுக்கு - அவைகளுக்கு
7.  நேற்றுதான் - நேற்றுத்தான் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
8.  வாக்கெடுப்பு - கருத்தெடுப்பு
9.  சுவாச - மூச்சு
10.  அனுபவிக்க - துய்க்க
11.  நான்கினக்கும் - நான்கினுக்கும்
12.  விளைகின்றேன் - விழைகின்றேன்
13.  அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணாப் பல்கலைக்கழகம் (இயல்பாக விளிவேற்றுமையில் முடிந்த பெயரை அடுத்து வரும் வல்லினம் மிகும்}
14.  கலைக்களஞ்சியத்தை செழுமை - கலைக்களஞ்சியத்தைச் செழுமை (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
15.  கவிதை - பா
16.  இலங்கலை - இளங்கலை

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 11/11/15

1.  முறையோயென்று - முறையோவென்று
2.  பகிர்ந்துக் கொண்டே - பகிர்ந்து கொண்டே (மென்றொடர்க் குற்றியலுகர வீற்றின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது, பகிர்ந்து கொண்டே என்பது வினையெச்சத் தொடர்- அல்வழிப் புணர்ச்சி, எனவே மிகாது)
3.  சிறப்பியல்பை பயன்படுத்தாமல் - சிறப்பியல்பைப் பயன்படுத்தாமல் (இயல்பை என்ற இரண்டாம் வேற்றுமை யுருபுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்)
4.  காலை பணிவு - காலைப் பணிவு
5.  ராமாயணம் - இராமாயணம்
6.  தட்டச்சு செய்து - தட்டச்சுச் செய்து
7.  மங்குள் - மங்குல்
8.  நிறைவ - நிறைவாக
9.  தபாவளியை பற்றி பல - தீபாவளியைப் பற்றிப் பல
10.  பண்டிகை - விழா
11.  பிரத்த - பிரித்த

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 3/11/15

1. இதை துதி பாட்டாய் - இதை வழுத்துப் பாட்டாய்
2. இவையினைக் - இவற்றைக்
3. வேலைப் பழு - வேலைப் பளு
4. அதை தனியொரு - அதைத் தனியொரு
5. வரவில்லயா - வரவில்லையா
6. காட்டுகின்றீகளா- காட்டுகின்றார்களா
7. இலகுவாக - எளிதாக (அருளியாரிடம் பாருங்கள் அம்மா)
மேலும் படிக்க »

பன்னாடையிற் படிந்தவை என்றால் என்ன ?

உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள். பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும்நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கள் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் 
நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.
 
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம்பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண்கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு
ருமை,பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும்அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வ
ர் பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோம . அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும்கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக்கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.

பன்னாடை= சல்லடை:

எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே..... நம் குழுவிலும் வருகின்றன... ஆயினும் அதனை நேரடியாகச் சொல்வது சிலவேளை கசப்பில் முடியலாம்... திருத்தப்படாத பிழைகளைச் சொல்லாமல் விடவும் முடியாது... ஏனென்றால் இதுவே சரி என்று எண்ணிவிடக்கூடும்.

எனவே, ஒரு நாள் முழுக்க, குழுவில் போடப்படும் செய்திகளில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் ஆரிய/பிறமொழிச் சொற்களை அடுத்த நாள் முதல் வேலையாகப் பட்டியலிட்டுக் கொள்வோம்... எழுதியவர் இன்னார் என்று குறிப்பிடாது பிழையும் திருத்தமும் மட்டும் போடப்படும்.. இப்பொறுப்பை யாரேனும் ஏற்க முன்வருக...  யாரும் முன்வரவில்லையாயின் நானே ஏற்றுக் கொள்கிறேன்...  என்ன.. சரிதானே நண்பர்களே... நன்றி..."

-அரங்கன் 
மேலும் படிக்க »

மரபு வழுக்கள் / மரபுத் தொடர்


மரபு வழுக்கள் / மரபுத் தொடர் இரண்டும் ஒரே பொருளா...?

வழு என்றால் குற்றம்....

மரபு வழு என்றால் மரபை ஒழுகாது எழுதுவது பேசுவது

மரபுத் தொடர் என்றால் மரபு இதுதான் என்று உணர்த்தும் தொடர்

எ-டு:

மரபு வழு - வாழைச்செடி
மரபுத்தொடர் - வாழைக்கன்று


இனி சில மரபு வழுக்களையும் அதற்கான திருத்தங்களையும் பார்ப்போம்......

 மரத்தை வெட்டு
தக்காளியை நறுக்கு

 தக்காளியை வெட்டு என்பது வழு... தவறு...

 விறகுகளைக் கட்டு
பூக்களைத் தொடு

பூக்களைக் கட்டு என்பது வழு... அதாவது தவறு... கட்டுவது என்பது கடினமான பொருட்களையே...

பூவைத் தொடுக்க வேண்டும் என்ற தமிழின் நுட்பம் காண்க....

 〰〰〰

 கீற்று/பத்து    தேங்காய் பத்து கொஞ்சம் குடு.... பூசணிக்காயை கீற்று கீற்றாய் நறுக்கி வை


விறகை எரி
குப்பையைக் கொளுத்து
விளக்கை ஏற்று

விளக்கைக் கொளுத்து என்றால் அது வழு....



நுங்கினைச் சீவு
இளநீரைச் சீவு
தலையை வாரு...

தலையைச் சீவு என்பது வழு... நுங்கு வெட்டிக் குடு என்பதும் வழு....

ஒரே காம்பில் திரண்டிருக்கும் பூவை கொத்து என்றும் பழத்தை குலை என்றும் அழைத்தல் மரபு...

ஓன்று - பல:

பூ - கொத்து
பழம் - குலை
மரம் - தோப்பு
வெவ்வேறு மரங்கள் - சோலை
ஆடு - மந்தை
மனிதன் - கூட்டம்
யானை - பந்தி
மலை - தொடர்
கல் - குவியல், கற்குவியல்
நாற்று - முடி
மயிறு - கற்றை
கடை - சந்தை

 〰〰〰〰

கற்களை ஓர் இடத்தில் திரட்டும்போது பரப்பிப்போட மாட்டார்கள குவித்தே போடுவார்கள், எனவே கற் குவியல். யானைகள் ஒன்று சேரும்போது வரிசை வரிசையாகவே சேரும். எனவே யானைப் பந்தி. விறகைத் திரட்டி உறுதியான கயிற்றால் (கொடியால்) இறுக்கிக் கட்டுகிறோம் எனவே விறகுக் கட்டு. நாற்றை அப்படி இறுக்கிக் கட்டினால் சிதைந்து போகும். எனவே மெதுவாக அவைகளில் சில நாற்றுகளைக் கொண்டே மென்மையாக முடிந்து வைக்கிறார்கள். ஆகவே அது நாற்று முடி.

 〰〰〰〰〰

செயல்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வடிவம் பருவம் என்னும் அடிப்படையிலும் சொல்லாட்சி அமைய வேண்டும்.

ஓர் இலையின் பல்வேறு பருவங்களைத்
தளிர்
இலை
பழுப்பு
சருகு

என்னும் வேறு வேறு சொற்களால் குறிக்கிறோம். இந்தச் சொற்களைச் சொன்னவுடனேயே நமக்கு அதன் தோற்றமும் விளங்கிவிடுகிறது.

 அரும்பு
முகை
மொட்டு
மலர்
அலர்
வீ
செம்மல்

என்னும் சொற்கள் நமக்குப் புதுமையாகத் தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் மலரின் பல்வேறு பருவங்களை இந்தத் தனித்தனிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள். மலரும் பருவத்தில் உள்ள பூவையே மலர் என்றார்கள். நன்றாக விரிந்தது அலர். அலர்ந்து வாடிய தோற்றத்தில் இருப்பது வீ. வாடிச் சுருண்டு கீழே விழுந்தபின் அது செம்மல் என்றே சொல்லப்பட்டது.


ஆட்டுப் பாகன் ? ஆட்டிடையன்///
யானை இடையன்? யானைப் பாகன்///
குதிரைக்கன்று? குதிரைக்குட்டி////
ஆக்குட்டி (பசுவின் குட்டி) - ஆக்கன்று (பசுவின் கன்று) (பசு ஆரியம் - ஆ - தமிழ்; ஆவின் பால் - பசுவின் பால்)
தென்னங்கன்று ? தென்னம்பிள்ளை///
வேப்பம்பிள்ளை? வேப்பங்கன்று///
பனம்பிஞ்சு ? பனங்குரும்பை///
புளியங்குரும்பை? புளியம்பிஞ்சு
மா ஓலை - மாவிலை
பனை இலை? பனையோலை///
குருவிக்குட்டி? குருவிக்குஞ்சு///
நாய்க்குஞ்சு? நாய்க்குட்டி///
மான் குட்டி? மான் கன்று///
யானைச்சாணம்? யானை இலத்தி
எருமை இலத்தி? எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்? ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்? கழுதை விட்டை


ஆண்பால் பெண்பால்

அச்சன் அச்சி
அண்ணன் அண்ணி
அப்பன் அம்மை
அமைச்சன் அமைச்சி
அம்மான் அத்தை
அரசன் அரசி (ராஜா, ராணி ஆரியம் என்க)
ஆசிரியன் ஆசிரியை
ஆயன் ஆய்ச்சி
இடையன் இடைச்சி
உழவன் உழத்தி
ஊமையன் ஊமைச்சி
எம்பி எங்கை
எயினன் எயிற்றி
ஒருவன் ஒருத்தி
ஓதுவான் ஓதுவாள்

 ஆண்பால் பெண்பால்

கடுவன் மந்தி (குரங்கின் ஆணும் பெண்ணும்)
கடா    - கிடாரி, மறி (ஆடு)
கணக்கன் - கணக்கச்சி
கணவன் - மனைவி
கரியன் கரியள்
கலை - பிணை (மானின் ஆணும் பெண்ணும்)
காளை - ஆ (மாட்டின் ஆணும் பெண்ணும், பசு என்பது ஆரியம)
கிழவன் - கிழவி
குறவன் - குறத்தி
குரவன் - குரவள் (தலைவன்)
கூனன் - கூனி
கூகை - போந்து
கொழுந்தன் - கொழுந்தி (மைத்துனன்/ மச்சான்/ மைத்துனி/ மச்சினி/ மச்சி என்பதெல்லாம் ஆரியம்; மச்சான் என்பதை அளியன்/கொழுந்தன் என்றே வழங்குதல் வேண்டும்)

சிறுவன் - சிறுமி
சிவன் - சத்தி
சிறியன் - சிறியள்
சிறுக்கன் - சிறுக்கி
சிற்றப்பன் - சிற்றன்னை
சீமான் - சீமாட்டி (இவை இரண்டும் ஸ்ரீமான் என்ற ஆரியத்தின் அடி பிறந்தவையே)

சேவல் - பெட்டை (கோழியின் ஆணும் பெண்ணும்)
தச்சன் - தச்சச்சி
தம்பி - தங்கை
திருமால் - திருமகள்
திருவாளன் - திருவாட்டி (திருமதி என்பதன் மதி ஆரியமே, மதி என்பது நிலவு, அறிவு என்ற பொருளிலேயே தமிழில் வழங்கும், பெண் எனும் பொருளில் வழங்குதல் ஆரியத்தில் மட்டுமே)

மருத்துவன் - மருத்துவச்சி
மாமன் - மாமி
வீரன் - வீரி
மேலும் படிக்க »

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்


இதுவரை ரகர, றகர, லகர, ளகர, ழகர வேறுபாட்டு சொற்களைக் கண்டொம்.

இனி காணவிருப்பது  னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்.


னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

அரன் - சிவன்
அரண் - கோட்டை

அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி

ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி

என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க

ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்

கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்

கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு

கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி

தனி - தனிமையான
தணி- குறைதல்

தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி

தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்

தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்

நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு

பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்

பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று

மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்


மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்

மனை - வீடு
மணை - அமரும் பலகை

மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை

வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை


சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:

இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்

கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)

இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்

 கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி

 துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)

 நன்னுதல் - நல்ல நுதல் (அழகிய நெற்றி); நண்ணுதல் - பொருந்துதல்

நன்னுதல் வானமென் றாகிட வேயிரு
நாணவில் கோடென தோன்றிடவே
பொண்வண்ணச் செங்கதிர் போலமின் னுஞ்சிறு
பொட்டொன்று சாந்தெடுத்(து) இட்டிடுவாள்.

சிட்டுக்கும்மி:

அம்மா தன் பெண்குழந்தைக்கு சாந்துப்பொட்டு வைக்கிறாள். அவ்வாறு சிவந்த பொட்டு வைத்தவுடன் அப்பெண்ணின் அழகிய நெற்றி வானமாகவும், வில் போன்ற இரு புருவங்கள் மலைகளாகவும், வைத்த அப்பொட்டு அம்மலையிடை எழுகின்ற ஞாயிறாகவும் தோன்றினவாம்.


கடந்த கிழமையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பின் வருமாறு:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)
3. னகர ணகர வேறுபாடு:
4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)
5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)
6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)
7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)


இவைகளில் இதுவரை நாம் கற்றறிந்தவை:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு.
3. னகர ணகர வேறுபாடு.


மேலும் படிக்க »

லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்களை இனி கண்டறிவோம்.


அலகு - பறவையின் நீண்ட மூக்கு; அழகு - அவள் அழகு, தமிழ் அழகு...

 தவலை - தண்ணீர் எடுப்பது
தவளை - தண்ணீரில் இருப்பது

வாளை - மீன் பெயர்
வாழை - மரத்தின் பெயர்


அலை - கடலலை; அழை - கூப்பிடு

அலைத்தல் - அடித்தல் ; அழைத்தல் - கூப்பிடுதல்

அல்லி - ஒரு பூ; அள்ளி - கையால் அள்ளி

லகர ளகர மெய்களுக்குப் பின் வேறு எந்த மெய்யெழுத்தும் வாரா...

ழகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வரும்

எ-டு; வாழ்த்து, வாழ்க்கை

அளி - கொடு ; அழி - இல்லாமல் செய்...

ஆலம் - ஒரு மரம்; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இலை - வாழை இலை; இளை - மெலி, இளைப்பு ; இழை - நூலிழை

ஒலி - கேட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப்புரவாக்கு....


குளம்பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம்பு - சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு.

(பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பி என்பதை குளம்பி என்று தமிழாக்க்கம் செய்தாராம்.

 கழை - மூங்கில் குழாய்... கழைக்கூத்தாடி

களை - ஓய்ந்து போதல், பயிர்களுக்கு இடையே வளரும் பயனற்ற செடி...

கலை - தமிழர் கண்ட 64 கலைகள்; என்னசேதிக் குழு (whatsapp) வழியாக தமிழைக் கற்பது இந்த  64க்குள்  வராது ...

உலை - கொதிகலன் boiler (உலை வச்சிட்டேன்... சோறு இப்ப ஆயிரும் என்ற பேச்சு வழக்கு)

உளை - விலங்குகளின் பிடறி மயிர்

உழை - உழைப்பு செய்தல்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்.

ஒல்லி - மெலிந்த , ஒள்ளிய - ஒளி பொருந்திய

உளை - விலங்குகளின் பிடறி மயிர்...


குறுந்தொகை - 121:

"விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
   
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்"

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க....


மளைப்பு? மலைப்பு/// மலையை அண்ணாந்து கண்டால் வரும் உணர்வு*....

 விழைதல் - விருமபுதல்

துல்லிய மெல்லிய
துள்ளிய  குதித்த/ ஆடிய

ஈர்ந்தண் - ஒரு பொருள் இருசொல்... ஈரம் - குளிர்ச்சி, தண்மை - குளிர்ச்சி (தண்ணீர் என்பது குளிர்ந்த நீரே...)

இன்றைக்கு, பலர்,  இந்த ஒருபொருள் இருசொல்லை ஆங்கிலம் புகுத்தி சொல்கின்றனர்

butஆனா, gateகதவு, ditchகாவா......


பால் - பசுவின் பால்
பாள் - தாழப்பாள்
பாழ் - வீணாகுதல்

பாலை - நீர் வளமற்ற நிலம்.
பாளை - தென்னை மரத்தின் பூ மடல்

தாலி - மங்கலக்கயிறு
தாளி - சமையலுக்கு தாளித்தல்.
தாழி - பெரிய பானை


லகர ளகர சொற்களைப் பார்க்கும் இவ்வேளையில் லகர ளகர மெய்களை ஈற்றெழுத்தாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியையும் சற்று நினைவு கூர்வோம்....

லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழிப் புணர்ச்சியில், (வேற்றுமை உரபு புணர்ச்சி அல்லாதவை அல்வழி என்று முன்னர் கண்டோம்) வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம்

வாள் + மாண்டது = வாண்மாண்டது
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு
முள் + மலர் = முண்மலர்
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை
= கொல்யானை

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்
= வில் வளைத்தான்  வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி
சில சிறப்புச் சொற்களுக்கு மட்டுமுள்ள சில சிறப்பு விதிகளைக் காண்க

வேல் + தீது = வேறீது
வாள் + தீது = வாடீது

கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது

இவை பொது விதிகளை மீறி வரும் சொற்களின் புணர்ச்சி என்க



லகர ழகர ளகர  வேறுபாடுகள்:

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை;
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்



 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க



கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு



கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)



கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்



குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை


கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு


கேழ் - ஒப்பு, ஒளி, நிறம்
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)


 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை


 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்



சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு



சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)



செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

செல்லு - கழிவு
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்


தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)


நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்
நள்ளார் - பகைவர்
மேலும் படிக்க »